ஸ்டெர்லைட் ஆலையை (sterlite plant) மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டதாகவும், சுற்றுச்சூழல் போன்ற காரணிகளை கூறி நாட்டின் வளர்ச்சியை சிலர் தடுப்பதாகவும் ஆளுநர் ரவி பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு (sterlite plant) எதிராக தூத்துக்குடியில் மக்கள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அறிக்கையை தமிழக அரசிடம் கடந்த ஆண்டு சமர்ப்பித்தது.
இந்த ஆணையத்தின் அறிக்கையில் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் 17 காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் குற்றவியல் வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை ராஜ்பவனில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கூடங்குளம், ஸ்டெர்லைட் போராட்டங்களின் போது வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40% பூர்த்தி செய்யப்பட்டு வந்ததாகவும், சுற்றுச்சூழல் போன்ற காரணிகளை கூறி நாட்டின் வளர்ச்சியை சிலர் தடுப்பதாகவும், மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி-யின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.