திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்த பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி. இவர் சுமார் 12 முறை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் இவரின் கூட்டாளிகள் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் அப்பகுதியில் உள்ள கோயில் திருவிழாவின் போது சாராய கும்பல் மற்றும் இளைஞர்கள் இடைய மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் சாராய கும்பல் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கை, கால், மண்டைகள் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக வாணியம்பாடி தாலுகா போலீசார் தகராறில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகரில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்த போலீசார் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிகிறது.
இதனை அறிந்த அவருடைய மனைவி மணிமேகலை மாவட்ட ஆட்சியர் கூடுதல் அரங்கில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் தனது மூன்று குழந்தைகளுடன் திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
இதனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து மணிமேகலை கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றிய வாணியம்பாடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் திருப்பத்தூர் நகர காவல்நிலையத்திற்கு மணிமேகலை அழைத்துச் செல்லப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் திடீரென பெண் ஒருவர் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.