திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்து மாரடைப்பால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா என்பவரது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திரா ஆகிய இருவரையும் கடந்த 9-8-2023 அன்று அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன், (வயது 59) என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த கிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .