தூத்துக்குடியில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக தடைப்பட்ட ரயில் சேவை நாளை முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதனால் வீடுகள் மற்றும் தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. இதன் காரணமாக தரைவழி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பொது மக்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மீட்புப்பணிகள் நிறைவடைந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பு வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக தடைப்பட்ட ரயில் சேவை நாளை முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்செந்தூரில் தண்டவாளங்களில் நீரை அகற்றும் பணி நடப்பதால் ஒரு வாரத்திற்கு பின் ரயில் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.