தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக செல்லக்கூடிய பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் வீடுகள் மற்றும் தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரையில் தூத்துகுடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தன்குளம், காயல்பட்டினம் பகுதிகள் தனி தனி தீவாக காட்சியளித்தது. பல்வேறு இடங்களில் காட்டாற்று வெள்ளம் காரணமாக சாலைகள் துண்டிக்கபட்டது. இதன் காரணமாக தரைவழி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனை அடுத்து சாலைகளை சரி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. சில இடங்களில் தற்காலிக பாலம் அமைப்பட்ட நிலையில், இன்று காலை முழுமையாக தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, மதுரை மார்க்கமாக செல்ல கூடிய அணைத்து பேருந்துகளும் இயக்கபட்டு வருகிறது.
இருப்பினும் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்ல கூடிய வழியில் ஆத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தால் சாலை முற்றிலும் சேதமடைந்த காரணத்தால் இந்த பகுதிகளுக்கு முற்றிலுமாக பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது.
பாதைகள் சரி செய்யப்பட்ட பின் விரைவில் பேருந்து சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.