தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தவெக தற்போது உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சிக்குத் தேவையான 118 எம்எல்ஏக்களின் பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆதரவை தேடும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது.
இதில் காங்கிரஸ் கட்சி, சில நிபந்தனைகளுடன் தவெக அணிக்கு ஆதரவு அளிக்க சம்மதித்தது. தொடர்ந்து சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக அறிவித்தன.
இந்த ஆதரவு கடிதங்களுடன் விஜய் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதற்கிடையில், ஐ.யூ.எம்.எல். மற்றும் விசிக ஆதரவு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், விஜயை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தவெக சார்பில் வழக்கறிஞர் எழிலரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
