கோவளத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள தனியார் ஹெலிகாப்டர் சேவை, அப்பகுதியின் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கு விளைவிப்பதாலும்,
வலசை வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதாலும் அதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வழியுறுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
“சென்னை, மாமல்லபுரம், கோவளம், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளின் நில அழகையும், கடல் அழகையும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வசதியாக,
கோவளத்தை மையமாகக் கொண்டு தனியார் ஹெலிகாப்டர் சேவை கடந்த நவம்பர் 13 ஆம் தேதி முதல் தொடங்கப் பட்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க : Ayodhya Ram Mandir : அழைப்பு வந்துருக்கு.. நானும் வருகிறேன்.. நித்தியானந்தா!!
இந்தத் திட்டத்தால் மக்களுக்கும், சூழலியலுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்.
கம்போடியா நாட்டைச் சேர்ந்த ஏரோடான் சாப்பர் (கம்போடியா) கம்பெனி லிமிடெட் (Aerodon Chopper (Cambodia) Co., Ltd.) என்ற நிறுவனம்,
அதன் இந்திய துணை நிறுவனமான ஏரோடான் சாப்பர் பிரைவேட் லிமிடெட் (Aerodon Chopper Pvt., Ltd. (India)) மூலம் சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளது.
கேளம்பாக்கம் & கோவளம் சாலை சந்திப்பு அருகில் இந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர் மையம் கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வருகிறது.
கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பயணிகளை ஏற்றிச் சென்று சென்னையின் முக்கிய இடங்கள், கோவளம், மாமல்லபுரம், கடற்கரை பரப்புகள்
ஆகியவற்றை சுற்றிக்காட்டும் சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியிருப்பதாக தெரிகிறது.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுற்றுலாவை வளர்க்கவும், வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கவும், அதன் வழியாக கிழக்குக் கடற்கரை பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை பெருக்கவும் நவீன சுற்றுலாத் திட்டங்கள் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
சுற்றுலா வளர்ச்சிக்கான திட்டங்களை தனிப்பட்ட முறையில் நானும், கொள்கை அளவில் எனது தலைமையில் இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறோம்.
அதே நேரத்தில் கோவளம் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரைச் சாலையில் வாழும் மக்களுக்கு இந்தத் திட்டங்கள் எவ்வகையிலும் இடையூறாக இருக்கக் கூடாது” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.