மோசடி வழக்கு : பாடலாசிரியர் சினேகன் தொடர்ந்த பண மோசடி வழக்கில், திருமங்கலம் போலீசார் இன்று காலை நடிகை ஜெயலட்சுமி வீட்டில் சோதனை நடத்திய நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு ‘சினேகம் ஃபவுண்டேஷன்’ பெயரை பயன்படுத்தி நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான,
ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க : Agricultural Budget : விவசாயிகளுக்கு செயற்கை பேரிடர் பரிசு – டிடிவி காட்டம்!
அதனைத் தொடர்ந்து தன் மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் (மோசடி வழக்கு).
இது தொடர்பாக இருவரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை திருமங்கலம் போலீசார் அண்ணா நகரில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டிற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக ஜெயலட்சுமி வீட்டில் போலீசார் சோதனை நடத்திய நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
நடிகை ஜெயலட்சுமியை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் பொழுது நடிகை ஜெயலட்சுமி, நான் என்ன தவறு செய்தேன். மக்களுக்கு அறக்கட்டளை தொடங்கியதும், பாஜக நிர்வாகியாக இருப்பதும் தான் நான் செய்த தவறா?
காலை 9 மணி முதல் சோதனை நடத்தி, விசாரணை செய்ததில் போலிஸாரால் ஒரு சிறு தவறை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது எதற்காக என்ன காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
அதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.