ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை அளித்திருப்பது போல தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பாஜக சின்னத்தை சுவற்றில் வரையும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்,
பாஜகவின் சின்னமான தாமரையை ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது ஐந்து இடத்திலாவது வரைய வேண்டும் என இலக்கிணை நிர்ணயித்து, கட்சி நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் தாமரையை வரைந்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று, பாஜகவின் சின்னமான தாமரையை வரையும் பணிகளை நான் துவக்கி வைத்துள்ளேன்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்ய உள்ளார்.
ராமருக்கும், தமிழகத்திற்கும் பாரம்பரியம் மிக்க, கலாசார ரீதியான இணைப்பு இருக்கிறது. எனவே, இங்கு வழிபாடு செய்து அயோத்திக்கு பிரதமர் செல்வது தமிழகத்திற்கு பெருமை அளிப்பதாகும்.
அரசு நிகழ்ச்சிகளில் பிரதமரும், முதல்வரும் கலந்து கொள்வது இயல்பான ஒரு விஷயம். அதை கூட்டணி என்றெல்லாம் பார்க்க முடியாது.
பிரதமர் மோடி மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான தொகையை உடனடியாக கொடுத்துள்ளார்.
அந்த வகையில், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி, கொடுக்க வேண்டிய அக்கறை இவை இரண்டையும் பிரதமர் கொடுத்துள்ளார்.
ராமர் கோவில் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கமிட்டி அமைக்கப்பட்டு அதுதான் உரிய பணிகளை செய்துள்ளது.
இவை அனைத்தையும் தேர்தலோடு தொடர்பு படுத்த முடியாது. நாட்டில் எப்போதும் ஏதாவது ஒரு தேர்தல் நடந்து கொண்டு தான் இருக்கும்.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை அளித்திருப்பது போல தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும்.
இதையும் படிங்க : தமிழ்த்தாய் வாழ்த்து மேற்கத்திய இசையில் பாடுவதா? – அரசை கடிந்த அண்ணாமலை!
திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் வீட்டில் தலித் இனப்பெண் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி எம்எல்ஏ என்பதால் விட்டு விடாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.