தந்தை பெரியாரின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும் பாடுபட்ட தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகள், பகுத்தறிவு தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியது.
சாதிக் கொடுமை , தீண்டாமை , மூடநம்பிக்கை உள்ளிட்டவற்றுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய இவர், பெண் விடுதலைக்காக போராடியவர். சமுதாயத்தில் சாதி முறையையும், இழி நிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்த பெரியார், தனது 94 ஆம் வயதில் 1973ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 24 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் ஆனபிறகும் அவரின் கொள்கைகளும், அவரின் கோட்பாடுகளும், அவரின் முழக்கங்களும் இன்றளவும் தமிழகத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.
![48th-remembrance-day-of-father-periyar](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2021/12/FHWEjzgVkAIVbgN.jpg?resize=1150%2C542&ssl=1)
இந்நிலையில் தந்தை பெரியாரின் 48வது நினைவு தினமான இன்று, அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், செந்தில் பாலாஜி , எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.