சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ABVP அமைப்பினர், போலீஸ் விசாரணையில் போலி முகவரி கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மாணவி மரணத்திற்கு நீதி வழங்கவேண்டுமென கடந்த 14-ம் தேதி ஏபிவிபி அமைப்பினர் 37 பேர் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இவர்களை கலைந்து செல்லுமாறு கூறிய போதும், ஏபிவிபி அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால், இவர்கள் மீது தேனாம்பேட்டை போலீசார், சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட நபர்களை பிப்ரவரி 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களுக்காக நீதிமன்றத்தில் ஏபிவிபி அமைப்பினரால் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களில் 12 பேர் போலீசாரின் விசாரணையில் தங்களது முகவரியை தவறாகக் கொடுத்தது தெரியவந்ததுள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர்களின் கையெழுத்து போலி என்பதும் தெரியவந்தது.
அவர்கள் மீது போலி கையெழுத்து இடுதல், மோசடி ஆவணத்தை பயன்படுத்தல், பொய்யாகப் புனையப்பட்ட ஆவணங்கள் சமர்பித்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினர் தங்கள் அடையாளங்களை மறைக்க முயற்சித்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.