ஒடிசா மாநிலத்தில் லாரி மீது வேன் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை -20 இல் வேன் ஒன்று குழந்தைகள் உட்பட 19 பேருடன் கட்டகானில் உள்ள புகழ்பெற்ற மா தாரிணி கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
கோயிலில் இருந்து 3 கிமீ தொலைவில் வந்த போது அந்த வழியே ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக வேன் மோதியது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 11 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் முதலில் அருகிலுள்ள கட்டகான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், படுகாயமடைந்த மூன்று நோயாளிகள் SCB மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், மேலும் 8 பேர் கியோஞ்சர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள கட்டகான் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாலிஜோடி கிராமத்திற்கு அருகே நடந்த இந்த சம்பவம் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
முதல் கட்ட விசாரணையில் வேனில் பயணித்தவர்கள் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேனின் ஓட்டுநர் கவனக்குறைவாக பின்பக்கத்திலிருந்து மோதியிருக்கலாம் என்று கூறி உள்ள காவல்துறையினர், விபத்துக்கான சரியான காரணம் விரிவான விசாரணைக்குப் பிறகு கண்டறியப்படும் என்றும் கூறி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.