இன்று சென்னையில் நடைபெற இருந்த ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி கடும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
A.R. ரஹ்மானின் 30 ஆண்டுகளை பல்வேறு விதங்களில் கொண்டாடி வரும் ரசிகர்களுக்காக தற்போது இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரஹ்மான் இசையமைத்த 15 படங்கள் திரையிடப்பட்டன.
அதையடுத்து தற்போது “மறக்குமா நெஞ்சம்” என்கிற பெயரில் இந்த நேரலை இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜோனிதா காந்தி, ஷக்தி ஸ்ரீகோபாலன் உள்ளிட்டப் பாடகர்கள் கலந்துகொள்ள இருந்தார்கள்.
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்காக பாடகர்கள் முன்னேற்பாடுகள் செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் ரஹ்மான். அதையடுத்து இன்று இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், ரசிகர்கள் முன்னதாகவே நிகழ்ச்சிக்கு வந்து தங்களது இடங்களை பிடித்துக்கொள்ளுமாறும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யா ராம் பேலேஸில் நடைபெற இருந்த இந்த கான்சர்ட் மனதில் நிலைத்திருக்கும் ஒரு அனுபவமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, இன்று ரஹ்மானின் இசையை கேட்க காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சென்னையில் தொடர்மழை பெய்து வந்தது.
இந்நிலையில், மழையின் காரணமாக சென்னை பனையூரில் நடக்கவிருந்த ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.