நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள அயலான் (ayalaan) படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் சமூக வலைத்தளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான், பிரின்ஸ் படங்கள் கடந்த ஆண்டு வெளியானது. இந்நிலையில், டான் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வசூலை கடந்த நிலையில், பிரின்ஸ் படம் படுதோல்வியடைந்தது.
இதனால் தனது அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்வு செய்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன், அயலான் (ayalaan) படங்ககளில் நடித்துள்ள நிலையில், அந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
“அயலான்” திரைப்படம் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் நிலையில், “நேற்று இன்று நாளை” படத்தின் இயக்குநர் ரவிக்குமார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.
மேலும், சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் என பலரும் அயலான் படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக, அயலான் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைதுள்ளார். இந்த நிலையில், அயலான் படத்தில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதைப்படி வேற்றுக்கிரக வாசிகள் இடம் பெறும் காட்சிகளுக்கான கிராஃபிக்ஸ் பணிகள் தரமானதாக உருவாவதால் நீண்ட நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், இந்தாண்டு தீபாவளிக்கு அயலான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாளை ஏப்ரல் 24, காலை 11.04 மணிக்கு ‘அயலான்’ அறிவிப்பை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாளை வெளியாகும் ‘அயலான் ‘ அப்டேட் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும் எனவும், இந்த படம் மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள்” எனவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.