நடிகர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பரவி வந்த செய்திகளைக் கேள்விப்பட்டு, விஜயகாந்த் படங்களின் ஆஸ்தான வசனகர்த்தா வேலுமணி அதிர்ச்சியில் காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களாக மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஜயகாந்தின் உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து, சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும், யூ-ட்யூப் சேனல்களிலும் நடிகர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல வதந்திகள் வலம் வரத் தொடங்கியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேப்டனுடன் இருக்கும் புகைப்படங்களை பிரேமலதா வெளியிட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
விஜயகாந்த் நடித்த ’தேவன்’, ’எங்கள் ஆசான்’, ’விருதகிரி’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர் வேலுமணி. இவருக்கு வயது 55. கடலூரைச் சேர்ந்த இவர் வஸந்தின் ’பூவெல்லாம் கேட்டுப்பார்’, ’ரிதம்’ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராகவும் வேலுமணி பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை விஜயகாந்த் உடல்நிலை குறித்தான செய்திகளை கேட்டவர் மனமுடைந்து நேற்றிரவு சோர்வாக காணப்பட்டுள்ளார். பின்பு காலையில் அவர் உடல் நிலை சீரில்லாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.