Tada periyasamy criticize-திருமாவளவனிடம், அண்ணாமலை உள்ளிட்ட மூவர் ரகசிய டீல் போட்டு பாரதிய ஜனதாவை அடமானம் வைத்துவிட்டதாக, தடா பெரியசாமி தடாலடியாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக பட்டியலின மாநிலத் தலைவரான தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்பு தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது வருமாறு:-0
நான் மட்டும்தான் தற்போது வந்துள்ளேன். என்னுடைய ஆதரவாளர்கள் ஓரிரு நாளில் அதிமுகவில் வந்து இணைவார்கள். சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகவும், 7 பட்டியலின தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்ய உள்ளேன்.
நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி கே.பழனிசாமி எடுக்கும் வியூகங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன்.
இதையும் படிங்க: அதிமுகவில் ஐக்கியமாகும் தடா பெரியசாமி..எடப்பாடியின் அடுத்த முவ்?
சிதம்பரம் என்னுடைய சொந்த தொகுதி. இங்கு, பா.ஜ.கவில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து பட்டியலின மாநில தலைவரான என்னிடம் எதுவும் கேட்கவில்லை. வேலூரில் இருந்து வேட்பாளரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். பட்டியலின தலைவராக இருக்கும் எனக்கே பா.ஜ.கவில் மரியாதை இல்லை என்றால் பட்டியலின மக்களுக்கு அங்கு எப்படி மரியாதை இருக்கும்.
இதற்கு முழுக்காரணமும் மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர்தான். இவர்கள் மட்டும்தான் தமிழக பா.ஜ.கவா?தமிழக பா.ஜ.கவில் கோர் கமிட்டி என்னும்பெயரில் சிண்டிகேட் அமைத்து தொகுதியைப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுடன் சேர்ந்து மூவரும் சதித்திட்டம் தீட்டித்தான் இப்படி முடிவெடுத்திருக்கிறார்கள். திருமாவளவனிடம் பாரதிய ஜனதாவை அடமானம் வைத்திருக்கிறார்கள். திருமாவளவன் வெற்றிக்கு பாரதிய ஜனதா கட்சி துணை போகிறது.
சிதம்பரம் தொகுதியில், வேலூரைச் சேர்ந்தவரை நிறுத்தியது தவறான முடிவு என நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு கட்சியின் முடிவு என்று அண்ணாமலை தெரிவித்தார். அதனால் அதிமுகவில் சேர்வதுதான் என் முடிவு. சிதம்பரம் தனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரஹாசனை வெற்றிபெறச் செய்வதுதான் என்னுடைய இப்போதைய வேலை.
தமிழ்நாட்டில் பா.ஜ.கவை அண்ணாமலை குழிதோண்டி புதைத்திருக்கிறார். பா.ஜ.க வளர்ந்து இருப்பதாக மாயையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். கோவையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வின் வெற்றி என்பது கேள்விக்குறிதான்.இவ்வாறு செய்தியாளர்களிடம் தடா பெரியசாமி தெரிவித்தார்.