இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்துக்கு வெளியே நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பல்வேறு நாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த மாதம் தமிழ்நாட்டில் கோவை, சென்னை என அடுத்தடுத்து இசை நிகழ்ச்சிககளை நடத்தினார். இதில், ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் நடைபெற இருந்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதுதொடர்பாக பல ரசிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக கருத்து பதிவிட்ட நிலையில், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ரஹ்மானுக்கு ஆதரவு அளித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்திற்கு வெளியே தான் நிற்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார். ஆனால், எதற்காக ஐ.நா. அவைக்கு சென்றார் என்பது குறித்த தகவலை அவர் பகிரவில்லை.
முன்னதாக, கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் ஐ.நா.வில் இசை நிகழ்ச்சி நடத்தினார். அதுமட்டுமல்லாமல், பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு ஐ.நா.வில் இசை நிகழ்ச்சி நடத்திய இரண்டாவது இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்துக்கு வெளியே நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.