சிறந்த தமிழ்க் கவிஞரும் தேசியவாதியுமான மகாகவி சுப்ரமணிய பாரதி 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி தமிழ்நாட்டின் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.
ஏழாவது வயதிலேயே தமிழில் கவிதை எழுதத் தொடங்கினார். 11 வயதில், எட்டயபுரம் ராஜாவின் அவையில் நடந்த விவாதத்தில் வெற்றி பெற்றார், மேலும் அவர் தனது அறிவுத்திறன் மற்றும் புலமையால் ‘பாரதி’ என்ற பட்டத்தை பெற்றார்.
இதனை தொடர்ந்து,பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரும் இந்த இதழ்களுக்குப் பங்களித்தார். அவரது கவிதைகள் மற்றும் பாடல்கள் தேசபக்தி, மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு, ரஷ்ய மற்றும் பிரெஞ்சு புரட்சிகள், குழந்தைகள், பக்தி போன்ற பல்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நூல்களை எழுதினார்.
1907 ஆண்டு கால கட்டத்தில் நடந்த நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சூரத் காங்கிரசின் மாநாட்டில், கட்சி தீவிரவாதிகளாகவும், மிதவாதிகளாகவும் பிரிந்தபோது, பாரதி பாலகங்காதர திலகர் பக்கம் நின்று அதிகாரிகளுக்கு எதிராக ஆயுதமேந்திய எதிர்ப்பை ஆதரித்தார்.
இதனையடுத்து 1908 முதல் 1918 வரை 10 ஆண்டுகாலம் புதுவையில் வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தியா, விஜயா, பால பாரதம் , சூர்யோதயம் ஆகிய இதழ்களைத் தொகுத்து வெளியிட்டார் . அதில் ‘இந்தியா ‘ என்று எழுதியதன் காரணமாக பிரிட்டீஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சூழலில் பாரதியார் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி மெட்ராஸ் மாகாண ஆளுநர் பென்ட்லண்ட் என்பவருக்கு கடிதத்தை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ,சி.சுப்ரமணிய பாரதியின் பணிவான விண்ணப்பம்.மாட்சிமைதாங்கிய பிரபுவுக்கு இது இனிதாக இருக்கட்டும்.
புதுச்சேரியில் இருந்து என் சொந்த மாவட்டமான திருநெல்வேலி செல்லும் வழியில் கடலூரில் நான் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.
எனது விஸ்வாசத்தைத் தெரிவித்து பல வாக்குறுதிகள் அளித்த பிறகு என்னை நேரில் சந்தித்து உரையாட மாட்சிமை தாங்கிய பிரபுவின் அரசு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்-டி.ஜ.ஜி. (சி.ஐ.டி.) அவர்களை புதுவைக்கு அனுப்பியது மாட்சிமைதாங்கிய தங்களுக்கு நினைவிருக்கும்.
அந்த உரையாடலின்போது அரசாங்கம் தொடர்பான எனது அணுகுமுறையில் முழுவதும் திருப்தி அடைந்த டி.ஐ.ஜி. அவர்கள், முற்றிலும் போர்க்காலத்தைக் கணக்கில் கொண்டு, மெட்ராஸ் மாகாணத்தின் ஏதாவது இரண்டு மாவட்டத்தில் காவலில் இருக்க விருப்பமா என்று என்னிடம் கேட்டார்.
அந்த யோசனைக்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.
ஏனெனில், அரசியலை முற்றிலும் விட்டொழிப்பதாக நான் அறிவித்த பிறகு, போர் நடந்துகொண்டிருக்கும்போதுகூட, என் நகர்வுகளைத் தடுப்பதற்கான காரணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இப்போதோ போர் முடிந்துவிட்டது. அதிலும் நேச அணியினர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்நிலையில் அமைதியான ஒரு குடிமகனாக பிரிட்டிஷ் இந்தியாவில் குடியமர்ந்து வாழ்வதற்கு எனக்கு எந்த சங்கடங்களும் நேராது என்று முழுவதும் நம்பி புதுச்சேரியில் இருந்து கிளம்பி வந்தேன். என் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நான் கைது செய்யப்பட்டு கடலூர் மாவட்டச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளேன். இந்தச் சிறை நிலைமையை நீளமாக விவரித்து மாட்சிமைதாங்கிய பிரபுவுக்கு சோர்வை ஏற்படுத்த விரும்பவில்லை.
ஆனால், இந்தச் சிறை நிலைமைகள் என்னைப் போன்ற பிறப்பும், அந்தஸ்தும் உடைய ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியாதவை மட்டுமல்ல, என் உடல் நலனுக்கு அபாயத்தை விளைவிக்கும் சாத்தியங்களையும் கொண்டுள்ளவையும்கூட.
மாட்சிமைதாங்கிய உங்களுக்கு மீண்டும் ஒரு முறை உறுதி அளிக்கிறேன்: அரசியலின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகிவிட்டேன். பிரிட்டிஷ் அரசுக்கு விஸ்வாசமாகவும், சட்டத்தை மதிப்பவனாகவும் எப்போதும் இருப்பேன். எனவே என்னை உடனடியாக விடுவிக்க உத்தரவிடும்படி மாட்சிமை தாங்கிய தங்களிடம் யாசிக்கிறேன். மாட்சிமை தாங்கிய தங்களுக்கு கடவுள் நீண்ட மகிழ்ச்சியான ஆயுளை வழங்கட்டும்.
மாட்சிமை தாங்கிய தங்களின் மிகப் பணிவுள்ள வேலைக்காரனாக இருக்கவேண்டுமென யாசிக்கிறேன்.
-சி.சுப்ரமணிய பாரதிஎன்று குறிப்பிட்டுள்ளார்.
கவிதையை வாழ்க்கையாக உடையவர் மற்றும் வாழ்க்கையையே கவிதையாகப் படைப்பவரே கவிஞர் என கவிக்கு இலக்கணம் சொன்ன மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,பிரிட்டிஷ் ஆளுநருக்கு பாரதியார் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.