ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனுக்காக மத்திய பிரதேசத்தின் கேர்கட்டா நீர்த்தேக்கத்தின் கால்வாயில் இருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீரை பம்பு செட்டுகள் மூலம் வெளியேற்றிய சத்தீஷ்கரை(Chhattisgarh) சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜேஷ் விஸ்வாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நீர்தேக்கத்தில் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற அவர், செல்பி எடுக்கும்போது கை தவறி செல்போனை கால்வாய்க்குள் தவறவிட்டார். ஆனால் அந்த செல்போனை எடுப்பதற்காக அணையில் இருந்து மூன்று நாட்களாக பம்பு செட்டுகள் மூலம் சுமார் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை அவர் இறைத்துள்ளார். கால்நடைகளும், சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெற வேண்டிய அந்த தண்ணீரை, பம்பு செட்டு வைத்து இறைத்த குற்றத்திற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரது மேல் அதிகாரியான துணை மண்டல அதிகாரி ஆர் கே திவார் தண்ணீரை இறைக்க வாய்மொழி அனுமதி கொடுத்ததாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீருக்கான பணத்தை உங்கள் சம்பளத்தில் இருந்து ஏன் பிடித்தம் செய்யக் கூடாது..? என்று கேள்வி எழுப்பி ஆர் கே திவாருக்கு கண்காணிப்பு பொறியாளர் கடிதம் எழுதியுள்ளார்.
பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த நீர் இறைப்பு விவகாரம் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது.
செல்போன் விழுந்த கால்வாய்க்குள் 10 அடி அளவுக்கு தண்ணீர் இருந்ததாகவும், அதிலிருந்து 5 அடி வரை தண்ணீரை இறைக்க ஆர் கே திவார் வாய்மொழி அனுமதி கொடுத்ததாகவும் ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரி ராஜேஷ் விஷ்வாவோ, கூடுதலாக தண்ணீரை இறைத்து வீணாக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எது எப்படி இருப்பினும் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும், விவசாய பாசனத்திற்கும் பயன்பட வேண்டிய தண்ணீரை செல்போனுக்காக பம்பு செட்டு வைத்து இறைத்து வீணாக்கிய குற்றத்தில் நிச்சயம் ராஜேஷ் விஸ்வாஸ் மற்றும் அவரது மேல் அதிகாரியான ஆர் கே திவார் மீது தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.