தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு ஜூலை மாதம் நடக்க உள்ளது. இந்த தேர்விற்கு, பள்ளி மாணவர்கள் ஜூன் 11ம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..
“2024 – 2025ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ்-1 படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வி யாண்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என இளங்கலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும்.
இதையும் படிங்க : தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுக்கபோகும் கனமழை – வானிலை மையம் அலெர்ட்!!
தமிழக அரசின் 9 மற்றும் 10-ம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் இரண்டு தாள்களாக இத்தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும்.
முதல்தாளில் கணிதமும், 2-ம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும். இத்தேர்வின் முதல் தாள் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடைபெறும்.
விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பப் படிவத்தினை ஜூன்11ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் ரூபாய் 50 சேர்த்து, ஜூன் 26ஆம் தேதிக்குள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம், தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.