தமிழ்நாட்டில் பிரதமருக்கு ஓட்டுக்கேட்டு மட்டும் வருவதற்கு உரிமை இருக்கிறதா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ் 11 துறைகளை உள்ளடக்கி 4181.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் இந்த திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் திட்டங்களுக்கு 440 கோடியே 62 இலட்ச ரூபாயும், இதர துறைகளின் திட்டங்களுக்கு 886 கோடியே 46 இலட்ச ரூபாயும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒதுக்கீடு செய்யும்.
மீதமுள்ள நிதியை அந்தந்த துறைகள், வாரியங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடுகள் மூலம் அடுத்த ரெண்டு ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படும்.இந்த திட்டத்தில் என்னென்ன செய்யப் போகிறோம்? மாதிரிப் பள்ளிகளை உருவாக்குதல், குறைந்த விலையில் வீட்டுவசதி, திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்குதல், புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள நிர்மாணித்தல் மேம்படுத்துதல்,
முக்கியமான பகுதிகளில் துணை மின் நிலையங்கள், போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் மறுவாழ்வு மையம், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள். மருத்துவச் சுகாதார நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான உயர்சிறப்புப் பிரிவு, தரமான குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்படும்.
அதுமட்டுமல்ல. இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை அமைப்புகள், பொதுப் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் சந்தைகள், சலவை செய்யுமிடம் மற்றும் டயாலிசிஸ் மையங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும்.
640 கோடி ரூபாய் செலவில், கொடுங்கையூரில் உயிரி சுரங்கத் திட்டம், 238 கோடி ரூபாய் செலவில் இரண்டு பெரிய பாலங்கள், 80 கோடி ரூபாயில் தணிகாசலம் கால்வாய் புனரமைப்புத் திட்டம் 823 கோடி ரூபாய் செலவில் பாரிமுனை பேருந்து முனையம் மறுகட்டுமானம், 15 இடங்களில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 7 ஆயிரத்து 60 சேதமடைந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 9 ஆயிரத்து 798 புதிய குடியிருப்புகள் ஆயிரத்து 567 கோடியே 68 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப் போகிறோம்!
இப்படி, இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்ற 87 திட்டங்கள் உட்பட அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் முடிவுறுகிறபோது, வடசென்னையின் வரலாற்றில் ஒரு புதிய சாகப்தத்தை திராவிட முன்னேற்றக் கழகம் எழுதியிருக்கும் என்பதை பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.
நம்முடைய அரசு, இப்படி சென்னையை உயர்த்த நாள்தோறும் புதிய புதிய திட்டங்களாக நிறைவேற்றுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை எப்படி வெள்ளத்தில் முழ்கியது? சென்னை மட்டுமா! ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிதிநிலைமையும் மூழ்கடித்துவிட்டு சென்றார்கள். அவர்களைப் போன்று தான் 10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியும் சென்னைக்கு எதுவும் செய்யவில்லை.
தமிழ்நாட்டிற்கும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், நாளைக்கு பிரதமர் மோடி கன்னியாகுமரி வரப்போகிறார். எதற்காக வரப் போகிறார்? தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்கித் தர வரப்போகிறாறா? இல்லை, ஒட்டு கேட்டு வரப் போகிறார். ஒட்டு கேட்டு வருவதை நான் தவறு என்று சொல்ல விரும்பவில்லை.
சென்னை வெள்ளத்தில் மிதந்த போது, மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், தூத்துக்குடியும், கன்னியாகுமரியும் வெள்ளத்தில் மிதந்த போது மக்களைப் பார்க்க வராத பிரதமர், ஒட்டு கேட்டு மட்டும் வருவது நியாயமாக இருக்கிறதா?(cm stalin slam modi) குஜராத் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, அன்றைய தினமே ஹெலிகாப்டரில் சென்று பார்த்தாரே! மறுநாளே, நிவாரண நிதி கொடுத்தாரே! குஜராத்திற்கு ஏன் கொடுத்தீர்கள் என்று நான் கேட்கவில்லை.
தமிழ்நாட்டுக்கு ஏன் தரவில்லை என்று தான் கேட்கிறேன். குஜராத்துக்கு அன்றைய தினமே நிதி தருவதும், தமிழ்நாட்டிற்கு மூன்று மாதம் சென்ற பிறகும் நிதி தர மனதில்லாமல் போவதும் ஏன்? இதை கேட்டால், நம்மை பிரிவினைவாதி என்று அடையாளம் காட்டுகிறார்கள். நம்மை பிரிவினைவாதி போல் பேசுகிறார்கள்.
அது மட்டுமா! சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டப் பணி! நாம் ஆட்சிக்கு வந்த உடனே, பிரதமரை நான் முதல் முறையாக பார்க்கச் சென்றபோது, மெட்ரோ பணிக்கு நிதி கேட்டேன். இப்போது, 3 வருடம் ஆகிறது. என்ன நிலைமை? நமக்கு அடுத்து கேட்ட மாநிலங்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால், நமக்கு ஒன்றும் வரவில்லை! தரவில்லை!
நாம் கேட்டுக் கொண்டே இருப்பது என்ன? ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாய் எங்கிருந்து போகிறது? நம்முடைய தமிழ்நாட்டில் இருந்து போகிறது. நம்முடைய பணம் தான் போகிறது. ஆனால், அதற்கேற்ற மாதிரி திருப்பி தருகிறார்களா? நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், 28 பைசா தான் மறுபடியும் நமக்கு வருகிறது! அதையாவது ஒழுங்காக கொடுக்கிறார்களா? இல்லை! என்று தெரிவித்துள்ளார்.