திருச்சி மாவட்டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்க. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 25 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார்.
திருச்சி அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (வயது 45) கடந்த 30-7-2023 அன்று அரிஸ்டோ இரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் காயமுற்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினருக்கு 25 இலட்சம் ரூபாய்க்கான நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார் .

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 25 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை மறைந்த தலைமைக் காவலர் ஸ்ரீதர் அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.