- மாநில எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம்.
- குஷ்புவை கண்டித்து, நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க கோரி நடிகர் சங்க தலைவரிடம் புகார்.
நடிகை திரிஷா பற்றி மன்சூர் அலிகான் வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டார். அதையடுத்து குஷ்புவுக்கு எதிராக ஒருவர் கருத்து பதிவிட்ட நிலையில், அவருக்கு குஷ்பூ அளித்த பதில் பதிவில் சேரிமொழி என்று குறிப்பிட்டிருந்தார்.
குஷ்பூவின் அந்த பதிவிற்கு காங்கிரஸ் எஸ்.சி. துறை கண்டனம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தியது. ஆனால் ‘சேரி’ என்ற பெயரில் எத்தனையோ ஊர்கள் உள்ளன. பிரஞ்சு மொழியில் சேரி என்பதற்கு அன்பு என்று அர்த்தம். நல்ல எண்ணத்தோடு வெளியிட்ட பதிவை உள்நோக்கத்தோடு எதிர்த்தால் நான் பொறுப்பல்ல. எனவே வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று குஷ்பூ மறுத்துவிட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் எஸ்.சி. துறையினர் குஷ்புவை மன்னிப்பு கோர வலியுறுத்தி மாநில தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் இன்று குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதையொட்டி சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள குஷ்பு வீட்டுக்கு செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும், பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் அருகே உள்ள சாலையில் போராட்டம் நடத்த போலீசார் அவர்களுக்கு அனுமதி அளித்தனர். அதையடுத்து இன்று காலை 10 மணிக்கே அந்த ரோட்டில் காங்கிரசார் திரண்டு மாநில எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தின் மாநில எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் கூறியதாவது..
எங்களுடைய முதற்கட்ட போராட்டம் தான் இது. குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம். நாளை அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.சி. துறை மாவட்ட தலைவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுப்பார்கள்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் செய்வோம். அதன்பிறகு குஷ்புவை கண்டிக்கவும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் கோரி நடிகர் சங்க தலைவரிடம் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் எனக் கூறினார்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அணுகுண்டு ஆறுமுகம், செயலாளர் விஜயசேகர், மாவட்ட தலைவர் துரை, உமாபாலன், நிலவன், வை.பிரபா, மீரா, சரளா, மஞ்சுளா, திரேசா, மாலதி, ராஜலட்சுமி, சுமதி, ரஞ்சித்கு மார், சரத்குமார், இந்துமதி, ராஜவிக்ரமன், வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.