7 ஆண்டாக உயர்த்தப்படாத கிரீமிலேயர் வரம்பை (Creamy layer limit) இருமடங்காக உயர்த்த வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரிமீலேயர் வருமான வரம்பு ரூ. 8 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகிவிட்டது.
ஆனால் இன்று வரை அந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில்,
அதை பரிசீலிக்கக் கூட மத்தியஅரசு முன்வராதது பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பெரும் வருத்தத்திலும், மனஉளைச்சலிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் கிரீமிலேயர் என்ற தத்துவம் பின்பற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
மண்டல் ஆணைய பரிந்துரைப்படி, மத்திய அரசின் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 1992&ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பில் கிரீமிலேயர் என்ற தத்துவத்தை திணித்தது.
அதன்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் அனைவருக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாது. மாறாக, அவர்களில் கிரீமிலேயர் என்றழைக்கப்படும் உயர்வருவாய் பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படும்;
குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படும்.1993-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 1 லட்சமாக இருந்தது.
அதன்பின் பணவீக்கமும், வருமானமும் குறிப்பிடத்தக்க அளவில் உயராததால் 11 ஆண்டுகளாக கிரீமிலேயர் உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை.
2004-ம் ஆண்டில் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்ட கிரீமிலேயர் வரம்பு, அதன்பின் 2008-ம் ஆண்டில் ரூ.4.5 லட்சம், 2013-ஆம் ஆண்டில் ரூ. 6 லட்சம் எனப் படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2017-ஆம் ஆண்டில் ரூ. 8 லட்சம் என்ற அளவை அடைந்தது.
அதன்பின் 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் கிரீமிலேயர் வரம்பு (Creamy layer limit) உயர்த்தப்பட்டிருக்கவேண்டும்.
ஆனால், அவ்வாறு உயர்த்தப்படாததால் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பான்மையினரால் 27% இடஒதுக்கீட்டை பெறமுடியாத நிலை உருவாகியுள்ளது.
கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வேண்டுமென பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் குறித்த தேதியில் அமைக்கப்பட்டிருந்தால், அதன் பரிந்துரைப்படி கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்கக் கூடும்.
இதையும் படியுங்க MP மோடி வருகை: ராமேஸ்வரத்தில் போக்குவரத்துத் தடை
கல்வியிலும், சமூக நிலையிலும் மிக பின்தங்கிய நிலையில் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
அக்கடமையை நிறைவேற்றும் வகையில், கிரிமீலேயர் வரம்பை இப்போதுள்ள ஆண்டுக்கு ரூ.8 லட்சம் என்ற அளவிலிருந்து, இருமடங்காக, அதாவது ரூ.16 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
https://x.com/ITamilTVNews/status/1748284418702361063?s=20
அத்துடன் ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து, அதை முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்