முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார். மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசியலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்ததிலிருந்து, தயாளு அம்மாவிற்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கருணாநிதியை பார்ப்பதற்கு வீல்சேரின் மூலமாகவே தயாளு அம்மாள் அழைத்துவரப்பட்டார். இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வரும் அவரை முக்கிய நிகழ்ச்சிகளின் போது, முதல்வரும், மகனுமான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆசி பெறுவது வழக்கம்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு தயாளு அம்மாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.