ஆதரவற்ற மூதாட்டிக்கு அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.. ஐயோ நான் என்ன செய்வது? என்று தவிக்கும் மூதாட்டி.. நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் தில்லையாடி ஊராட்சி நாகப்பன் நகரை சேர்ந்தவர் ஆதரவற்ற மூதாட்டி கிளியம்மாள். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் இவர் கணவர் இறந்து விட இவருக்கு குழந்தை இன்றி ஆதரவற்ற நிலையில் தனிமையில் வசித்து வருகிறார்.
கூலி வேலை செய்து வாழ்நாளை ஓட்டி வரும் மூதாட்டி கிளியம்மாளுக்கு இதுவரையில் அரசிடமிருந்து எந்த ஒரு உதவி தொகையும் கிடைக்கவில்லை. பலமுறை நடையாய் நடந்தும் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை.
தற்பொழுது மகளிர்க்கு அனைவருக்கும் உரிமை தொகை அரசு அறிவித்தும் பலருக்கு கிடைக்காமல் உள்ள நிலையில், ஆதரவற்று யாரும் இல்லாத மூதாட்டிக்கும் இதுவரையில் மகளிர் உரிமை தொகையும் கிடைக்கவில்லை.
தனக்கு அரசிடம் இருந்து எந்த உதவி தொகையும் கிடைக்காமல் தவித்து வருவதாகவும், எங்கு சென்று தெரிவித்தாலும் அனைவரும் கை விரிப்பதாகவும் கூறும் மூதாட்டி நான் என்னதான் செய்வது என்று புலம்புகிறார்.
தன் நிலைமையை பார்த்தாவது தனக்கு உதவ மாட்டார்களா என மன்றாடுகிறார் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவித்தொகை கிடைக்க உத்தரவிட வேண்டும் என்பது அவரின் கோரிக்கையாக உள்ளது.