கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகளின் எண்ணிக்கையை நிறைவு செய்துள்ள திமுக, அக்கட்சிகளுக்கு ஒதுக்கவிருக்கும் தொகுதிகள் குறித்து இறுதிக்கட்ட ஆலோசனையில் இருக்கிறது.
இந்நிலையில், “திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடப் போதும் தொகுதிகளின் பட்டியல் இதுதான்!” என வாட்ஸ்அப் மூலமாக தாறுமாறாக பரப்படும் உத்தேசப் பட்டியல் திமுக உடன் பிறப்புகளை பரபரப்பில் ஆழ்த்தி வருகிறது. காரணம், திமுகவின் முக்கிய புள்ளிகளாக உள்ள சிலர் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்? என்ற விபரமும் அதில் அடங்கி இருப்பதுதான்.
அந்த பட்டியல்படி, 21 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலையில், கனிமொழி மீண்டும் தூத்துக்குடியிலும், ஆ.ராசா மீண்டும் நீலகிரியிலும், தற்போது உள்ளபடி, ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, மத்திய சென்னையில் தயாநிதி மாறன், தென் சென்னையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன், வேலூரில் துரைமுருகன் மகன் ஆகியோரும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், முதன் முறையாக களம் காணும் அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேருவுக்கு பெரம்பலூர் ஒதுக்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அந்த உத்தேச பட்டியலின் படி அவர் கரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.