மதுராந்தகத்தில், காதல் மனைவியை (Wife) கொலை செய்துவிட்டு கொலையை மறைக்க நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் மதுராந்தகத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது, மனைவி (Wife) சுதாமதி (25). இவர்கள் இருவரும் காதலித்து 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு மதுராந்தகம் கழனிபாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் மற்றொரு ஆண் குழந்தையும் உள்ளார்கள்.
இந்நிலையில், தம்பதி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.இதனால், அடிக்கடி தகராறும், சண்டையும் வந்தபடி இருந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவத்தன்று, சுதாமதி துணிகளுக்கு அயன் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென கரண்ட் ஷாக் அடித்து, சுதாமதி இறந்துவிட்டதாகவும், ரஞ்சித் குமார் உறவினர்களுக்கு போனை போட்டு கூறி உள்ளார்.
இதனால், பதறி அடித்துக் கொண்டு உறவினர்கள் ஓடிவந்துள்ளனர். கழனிபாக்கம் வந்த உறவினர்கள் சுதாமதியின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளனர்.
இந்நிலையில், கரண்ட் ஷாக் அடித்து சுதாமதி இறந்துவிட்டதை போலீசுக்கு சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் கூறியுள்ளார் ரஞ்சித்குமார்.
போலீசுக்கு தகவல் கொடுத்தால் சுதாமதியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்துவிடுவார்கள் என்றும், போலீசாருக்கு தெரிவதற்குள் நாமே, இறுதி சடங்குகளை செய்து விடலாம் என்றும், உறவினர்களிடம் கூறியுள்ளார்.
பின்னர், அவசர அவசரமாக சுதாமதிக்கு இறுதி சடங்குகளையும் அவரே செய்ய துவங்கியிருக்கிறார்.
ஆனால், சுதாமதியின் உறவினர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் உடனடியாக மதுராந்தகம் போலீசுக்கும் தகவல் கொடுத்து உள்ளர்கள்.
இதையடுத்து, தகவலறிந்து வந்த போலீசாரும் விரைந்து வந்து சுதாமதியின் சடலத்தை கைப்பற்றி மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், போஸ்ட் மார்ட்டம் செய்ததில் சுதாமதியின் தலையில், பலமாக தாக்கப்பட்ட காயம் இருந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, ரஞ்சித்குமாரிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணை செய்திருக்கிறார்கள். அப்போது அனைத்து உண்மைகளையும் ரஞ்சித் குமார் போலீசாரிடம் கூறியுள்ளார்.
விசாரணையில், சம்பவத்தன்று ரஞ்சித் குமார் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்பொழுது, சுதாமதி யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அதை பார்த்ததுமே ஆத்திரம் அதிகமாகி, கீழே கிடந்த கட்டையால் சுதாமதியை பலமாக தாக்கியுள்ளார்.இதனால், தலையில் பலமாக அடிபட்டு, அங்கேயே ரத்த வெள்ளளத்தில் சரிந்துள்ளார் சுதாமதி.
அப்போதும் ஆத்திரம் தீராமல், சுதாமதியின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் ரஞ்சித்குமார். ரஞ்சித் குமார் சுதாமதியை கொலை செய்தது விசாரணையில் உறுதியானதையடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், ஒரே நாளில் தாய், தகப்பனை இழந்து, 2 குழந்தைகளும் கண்ணீர் வடிக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…