மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவியருக்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவிகளுக்கு ஆண்டுக்கு தலா 500 ரூபாயும், ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 1,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இதை பத்தாம் வகுப்பு வரை விரிவுபடுத்த தமிழக அரசு சமீபத்தில் பரிசீலனை செய்த நிலையில், பயனாளிகளின் பெற்றோர்களின் வங்கி கணக்கில் இந்த ஊக்கத் தொகையை செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3- 6 வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டத்திற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை வழங்க அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு பதில், வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக ரூ.16.75 கோடி நிதி விடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.72,000 என்ற அளவில் உள்ள மாணவியருக்கு மட்டும் ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக்கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.