New Election Commissioners : இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமை தேர்தல் ஆனையர் மற்றும் 2 ஆணையர்கள் பதவி வகிப்பது வழக்கம்.
தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இருக்கும் நிலையில், அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக பதவி வகித்து வந்தனர்.
இதில், அனுப்சந்திர பாண்டேவின் பதவிக்காலம் பிப்ரவரி – 14ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அன்று முதல் அவரது இடம் காலியாகவே இருந்தது. இந்நிலையில் தான் இம்மாதம் 9 ஆம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் அருண் கோயல்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எந்த காரனமும் இல்லாமல் அல்லது சொல்லாமல் தேர்தல் ஆனையர் ஒருவர் திடீர் ராஜினாமா செய்தது இந்திய அரசியல் தளத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில் தான்,
நேற்று அவசர அவசரமாக புதிய தேர்தல் ஆணையர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து ஆகியோரை தேர்வு செய்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு.
இதற்கு, “தேர்தல் ஆணையர்கள் தேர்வு முறை ஒருதலைபட்சமாக நடந்தது; முழுமையான விவரங்கள் இல்லாமல் 212 பேர் கொண்ட பட்டியலை கொடுத்து தேர்வு கூட்டமானது,
அவசரகதியில் நடத்தப்பட்டது” என அந்த தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்து இருந்தார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட அந்த தேர்தல் ஆனையர்கள் இருவருமே இன்று பதவியேற்றுக் கொள்ள இருந்த நிலையில் தான், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், விகாஸ் சிங் மற்றும் பிரசாந்த் பூசன் ஆகியோர்,
“தேர்தல் ஆணையர்கள் தேர்வு தொடர்பாக கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் தவறானது.
எனவே, அவர்கள் பதவி ஏற்கக் கூடாது” என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஒருபக்கம் தேர்தல் ஆணையர்களின் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்த நிலையில், அவசர வழக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த புதிய வழக்கும் விசாரணைக்கு வந்தது.
ஆனால், இது போன்ற அரசின் கொள்கை விவகாரங்களிலும், ஏற்கனவே பாராளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்ட சட்ட விதிமுறைகளிலும் நீதிமன்றம் தலையிட்டு தடை போட முடியாது” என வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
இதையடுத்து, ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து ஆகியோர் காலை சுமார் 11 மணியளவில் தேர்தல் ஆணையர்களாக பதவி ஏற்றுக் கோண்டனர்.
யார் இந்த புதிய தேர்தல் ஆணையர்கள்? New Election Commissioners?
ஞானேஷ் குமார் ஐ.ஏ.எஸ். :

• கேரளாவை சேர்ந்த 1988 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி
• கடந்த 2007 முதல் 2012 வரை பாதுகாப்புத்துறையில் இணை செயலாளராக பணியாற்றியவர்
• கூட்டுறவுத்துறை அமைச்சகத்தில் அமைச்சர் அமீத்ஷாவின் நேரடி பார்வையில் அதன் செயலாளராக நியமிக்கப்பட்டவர்.
• அனைத்து மா நிலங்களுக்கும் பொருந்தும் வகையிலும், அவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வகையிலும், Multi-State Cooperative Societies (MSCS) (Amendment) Act – 2023 என்ற சட்டப்பிரிவு உருவாக காரணமாக இருந்தவர்.
• நிர்வாக வசதிக்காக 3 முக்கிய கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கியவர்.
• மக்கள் பணம் பல நூறு கோடிகள் மோசடி செய்யப்பட்டு மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்திய சஹாரா ஊழல் தொடர்பாக நியாயமான முறையில் பாதிக்கப் பட்டவர்கள் தங்களின் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் தனி இணையத்தை ஏற்படுத்தியவர்.
• காஷ்மீர் மா நிலத்திற்கான சிறப்பு சட்டப்பிரிவான 370 நீக்கப்பட்ட போது, உள்துறை அமைச்சகத்தில் அமைச்சர் அமீத்ஷாவின் கீழ் பணியாற்றி அதற்கு ஏதுவான சட்ட வழிமுறைகளை வகுத்தவர்.
• 2024, ஜனவரி 31ஆம் தேதி ஓய்வு பெற்றவர்.
சுக்பிர் சிங் சந்து :

• உத்தர்கண்ட் மா நிலத்தைச் சேர்ந்த 1998 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி.
• பஞ்சாப் மா நிலம் அம்ரிஸ்டர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தவர்.
• உத்தர்கண்டின் கல்வி மற்றும் மனித வளம் ஆகிய அரசுத்துறைகளின் கூடுதல் செயலாளராக பணியாற்றியவர்.
• தேசிய நெடுஞ்சாலை துறையின் தலைவராக பதவி வகித்தவர்.
• மருத்துவத்தோஉ சட்டமும் படித்துள்ள இவர், சட்டம் படித்துள்ள இவர் நகர சீரமைப்பு மற்றும் முனிசிபாலிடி மேலாண்மை குறித்த 2 ஆய்வுக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.
• பஞ்சாப் மாநிலம் லூதியானா நகராட்சி ஆணையராக சிறப்பாக பணியாற்றியமைக்காக ஜனாதிபதி விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய தேர்தல் ஆணையர்களாக இவர்கள் இருவரும் பதவியேற்ற பிறகு முதன் முறையாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தான் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியை நாளை 16.03.2024 மாலை 3 மணிக்கு அறிவிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.