தேர்தல் பத்திர தரவுகளை எஸ்.பி.ஐ. வங்கி ஒப்படைத்துள்ள போதிலும், தற்போது தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதில் முழுமையான தரவுகள் இல்லை.
இதனால், “யார் யார் எந்தெந்த காலகட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு பத்திரம் வாங்கினார்கள், அதை எந்தெந்த அரசியல் கட்சிக்கு வழங்கினார்கள்?” என்ற விபரத்தை அறிய முடியவில்லை.
இது, மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவித்த நிலையில்தான், இன்று ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் செலவுகளுக்காக பொதுமக்களிடம் இருந்து நன்கொடை வசூலிப்பது உண்டு. அந்த அடிப்படையில், தேர்தல் பத்திரங்கள் நிதி மசோதா – 2017 ன் படி, கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதன்படி, தனிநபர்கள், நிறுவனங்கள், தேர்தல் பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.
அப்படி வங்கியில் இருந்து வாங்கப்படும் அந்த தேர்தல் பத்திரங்களில் வாங்குபவர்களின் பெயர்கள் இடம் பெறும், ஆனால் அதை நன்கொடையாக பெரும் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களை யாரிடம் இருந்து வாங்கினோம் என்ற விபரங்களை வெளியிட தேவையில்லை என கூறப்பட்டிருந்தது.
கடந்த 2018ல் இருந்து, 30 தவணைகளில், ரூபாய் 16 ஆயிரத்தி 518 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ. வங்கி விற்றுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, ‘இது சட்டவிரோதம்’ எனக்கூறி வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
அவ்வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றமும் “இது சட்டவிரோதமானது” என்று அறிவித்ததோடு, “நன்கொடையாளர்கள் குறித்த விபரங்களை எஸ்.பி.ஐ., அளிக்க வேண்டும்” என்றும், “அதை தேர்தல் கமிஷன், தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்றும் உத்தரவிட்டது.
இந்த தகவல்களை அளிக்க, ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் கேட்டு, எஸ்.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அதை மார்ச் 12ஆம் தேதி மாலைக்குள் தேர்தல் கமிஷனில் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்தத் தகவல்களை, தேர்தல் கமிஷன் 15ம் தேதி மாலைக்குள் இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.
அதன்படி, எஸ்.பி.ஐ. வங்கியால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த தேர்தல் பத்திர தரவுகள் அனைத்தும் நேற்று (14.03.2024) இரவு தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இரண்டு வகைகளில் வெளியிடப்பட்டுள்ள அந்த தரவுகளில் தேர்தல் பத்திரத்தை எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து வாங்கிய நபர்கள், தொகை, தேதி உள்ளிட்ட விபரங்கள் 337 பக்கங்களாகவும், கட்சிகள் பெற்ற தொகை பற்றிய விபரங்கள் 426 பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல் பத்திரங்களின் எண்கள் வெளியிடப்படவில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கட்சிகளுக்கும் எத்தனை தேர்தல் பத்திரங்கள் மூலம்,
எவ்வளவு நன்கொடை சென்றுள்ளது என்ற விபரத்தை அறிந்து கொள்ள முடிந்த மக்களால், “எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை செய்துள்ளார்கள்?” என்ற விபரத்தை அறிய முடியவில்லை.
இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்கின் விசாரணையானது இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 பேர் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் பத்திரங்களின் எண்களை வழங்காமல், அவற்றை வாங்கிய நிறுவனங்களின் பெயர்களை மட்டுமே வெளியிட்டதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்த நீதிபதிகள், தேர்தல் பத்திரம் எண் உள்பட அனைத்து விபரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்க வேண்டும்.
மேலும், தேர்தல் பத்திரம் (Electoral Bonds) எண்ணை வெளியிடாதது பற்றிய அடுத்த விசாரணையின் போது விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஸ்டேட் பேங்கிற்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டது.
இது குறித்த விசாரணையானது வரவிருக்கும் திங்கள் கிழமை (18.03.2024)க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், அன்றைய தேதியில் தேர்தல் பத்திரங்களின் குறியீட்டு எண் கள் தொகை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதால்,
தேர்தல் பத்திரங்களின் மூலம் வருமானம் ஈட்டிய அரசியல் கட்சிகளை விட அவற்றை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய நிறுவனங்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.