Electoral Bonds : அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் செலவுகளுக்காக பொதுமக்களிடம் இருந்து நன்கொடை வசூலிப்பது உண்டு. அந்த அடிப்படையில், தேர்தல் பத்திரங்கள் நிதி மசோதா – 2017 ன் படி, கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதன்படி, தனிநபர்கள், நிறுவனங்கள், தேர்தல் பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும். அப்படி வங்கியில் இருந்து வாங்கப்படும் அந்த தேர்தல் பத்திரங்களில் வாங்குபவர்களின் பெயர்கள் இடம் பெறும்,
ஆனால் அதை நன்கொடையாக பெரும் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களை யாரிடம் இருந்து வாங்கினோம் என்ற விபரங்களை வெளியிட தேவையில்லை என கூறப்பட்டிருந்தது.
கடந்த 2018ல் இருந்து, 30 தவணைகளில், ரூபாய் 16 ஆயிரத்து 518 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ. வங்கி விற்றுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, ‘இது சட்டவிரோதம்’ எனக்கூறி வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
அவ்வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றமும் “இது சட்டவிரோதமானது” என்று அறிவித்ததோடு, “நன்கொடையாளர்கள் குறித்த விபரங்களை எஸ்.பி.ஐ., அளிக்க வேண்டும்” என்றும், “அதை தேர்தல் கமிஷன், தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்றும் உத்தரவிட்டது.
இந்த தகவல்களை அளிக்க, ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் கேட்டு, எஸ்.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அதை நேற்று (12.03.2024) மாலைக்குள் அனைத்து தகவல்களையும் தேர்தல் கமிஷனில் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்தத் தகவல்களை, தேர்தல் கமிஷன் 15ம் தேதி மாலைக்குள் இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.
இதன்படி, ஒரு பட்டியலில் தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவரின் பெயர், பத்திரத்தின் மதிப்பு போன்றவற்றை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.
மற்றொரு பட்டியலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களிலிருந்து (Electoral Bonds) எவ்வளவு நன்கொடை பெற்றன என்ற தரவுகள் இருக்கும். இந்த தகவல்கள் அனைத்தும் மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
இதனால், எந்தேந்த கட்சி, யார் யாரிடமிருந்து எவ்வளவு நன் கொடை பெற்றுள்ளது என்ற தகவல்கள் தெளிவாக கிடைக்கப்பெறும் என பலரும் பேசி வரும் நிலையில், “அதெல்லாம் தெரிய சாத்தியமே இல்லெங்க..!” என அதிர வைக்கிறார் அதே வங்கித்துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர்.
இது குறித்து தனது பெயர் மற்றும் விபரங்களை மறைத்தபடி, நமது ஐ தமிழ் நியூஸ் (I Tamil News) நிருபரிடம் பேசிய அவர், “தேர்தல் பத்திரத் தரவுகளிலிருந்து, எந்தெந்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன என்ற முழுமையான பட்டியல் வெளியிடப்படும்.
தனிநபர் ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் எந்த தேதியில் எவ்வளவு தேர்தல் பத்திரங்களை வாங்கினார் என்பதும் தெரியவரும். தேர்தல் பத்திரங்களை யார் பெற்றுள்ளனர் என்ற விரிவான பட்டியலும் வெளியிடப்படும். ஆனால், “யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளித்தார்கள்?” என்ற விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டிய அவசியம் கிடையாது.
அதாவது, “தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் மற்றும் அவற்றை பணமாக்கியவர்களின் விவரங்களைப் பொருத்தி அந்த விபரங்களை வெளியிட வேண்டும்” என உச்ச நீதிமன்றம் கேட்கவில்லை. உதாரணத்திற்கு, நிர்மல் என்ற நிறுவனம் 1 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரத்தை வாங்கியதாக ஒரு தரவு உள்ளது.
அதே போன்று ‘ககமுக’ என்ற ஒரு கட்சி அதே 1 கோடி ரூபாய்க்கான பத்திரத்தை பணமாக்கியது என்றும் தரவு காட்டுகிறது. எனினும் நிர்மல் என்ற அந்த நிறுவனம் ‘ககமுக’ என்ற ஒரு கட்சிக்கு தான் தேர்தல் பத்திரத்தை கொடுத்தது என்பதை இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை
தேர்தல் ஆணையத்திடம்எஸ்.பி.ஐ. சமர்ப்பித்த விவரங்களில் ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள ‘தனித்துவ எண்ணெழுத்து குறியீடு’ சேர்க்கப்படாமல் இருக்கலாம். இதுகுறித்து விபரம் வெளியில் வராது என தெரிகிறது.
தேர்தல் பத்திரத்தை வாங்கியவர் மற்றும் பெறுபவர் இருவரின் தனித்துவமான எண்ணெழுத்து குறியீடு தெரிந்தால் தான், யார் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்பதைக் கண்டறியலாம்” எனக் கூறினார் அவர்.
ஆனால், “இந்த தேர்தல் பத்திர Electoral Bonds விபரங்களை வெளியிட்டால் அதில், ‘யார் யார் வாங்கினார்கள்?’ என்ற தனிப்பட்ட விபரங்களும் தெரிய வரும் என்பதால், குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு நன்கொடை அளித்த நபர்கள் அல்லது நிறுவனங்களின் மீது பிற கட்சிகள் காழ்ப்புணர்ச்சி காட்ட நேரிடும்.
எனவே, அரசியல் சாசனத்தின் 143ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு உள்ள உரிமையை பயபடுத்தி அவ்வாறு வெளியிடுவதை உடனே தடுக்க வேண்டும்” என்று கடிதம் மூலம் ஜனாதிபதி முர்முவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் புதுடெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் சங்க தலைவரான ஆதிஷ் அகர்வாலா..!
இதையெல்லாம் மீறி, “யார் யாரெல்லாம் தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள்” என்பதும், அவற்றை எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக தந்தார்கள் என்ற உண்மையும் வெளிச்சத்திற்கு வருமா..?