காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் பிறந்த நாளை அவரது ஆதரவாளர் உற்சாகமாக கொண்டாடுவார்கள். ஆனால், அவரது மகன் மறைவுக்கு பிறகு பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்த்து வந்தார். இருப்பினும், வீட்டிற்கு செல்லும் நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து வந்தார்.
இந்நிலையில், அவரது பிறந்த நாளான இன்று கட்சி நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதையடுத்து அவரது பிறந்த நாளை இன்று கொண்டாட இருந்த நிலையில், நேற்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வீடு திரும்பிய ஈவிகேஎஸ் அவர்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சென்னை விரைந்த அவர் தற்போது போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எந்தவிதமான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.