ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிராவல்ஸ் நிறுவனத்தின் பேருந்து 60 பயணிகளுடன் அண்டை மாநிலமான ஒடிசாவில் உள்ள சின்னப்பள்ளியில் இருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்ததால் விபத்து ஏற்பட்டது.
இதனை அடுத்து அந்த வழியாக சென்றவர்கள் போலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் உள்ள பத்ராசலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் 24 வயது தனேஸ்வர் தலபதி, 5 வயது ஜீது ஹரிஜன் மற்றும் 2 வயது நுனேனா ஹரிஜன் ஆகிய மூன்று பேர் அடையாளம் காணப்பட்தடுள்ள நிலையில், பலியானவர்கள் அனைவரும் ஒடிசாவை சேர்ந்தவர்கள் மற்றும் விஜயவாடாவிற்கு கூலி வேலை செய்ய வந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகவும், அவசர அவசரமாக வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும் உயிர் பிழைத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.