சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நாளை நடைபெற உள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் (ஆன் ஸ்ட்ரீட் நைட் பார்முலா-4) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில், சென்னையில் நாளை (31.08.24) சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (01.09.24) ஆகிய 2 தினங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.
சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதனிடையே, சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
“சென்னையில் நடைபெறவிருக்கும் பார்முலா 4 கார் பந்தயம் முக்கியமானதாக கருதப்படுகிறது. நாட்டிலேயே இதுபோன்ற ஒரு போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த அசாதாரண கார் பந்தயத்தை சென்னையில் கொண்டு வந்து, இந்தியர்களுக்கு உற்சாகமளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.