இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் மனைவியிடம் (cricketers wife) பண மோசடி.. பரபரப்பு புகார்..
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் மனைவியிடம் (cricketers wife) ரூ.10 லட்சம் பண மோசடி செய்து, கொலை மிரட்டலும் விடப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர். ஐ.பி.எல். போட்களில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் அவர், இந்திய அணிக்கு தேர்வானார். இதனையடுத்து, கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சி.எஸ்.கே. அணி தீபக் சாஹரை ஏலத்தில் எடுத்தது.
ஆனால், அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடவில்லை. மேலும், தீபக் சாஹர் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை அணியின் ஒரு போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் மைதானத்திலே தனது காதலை வெளிப்படுத்தினார்.
ஜெயாவும் அவரது காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து, இவர்கள் 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்த நிலையில் தீபக், ஜெயா இருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் சொகுசு ஓட்டலில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.
தொடர்ந்து இவர்களது திருமண வாழ்க்கை சீராக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத் நகரை சேர்ந்த 2 பேர் தீபக் சாஹரின் மனைவி ஜெயா பரத்வாஜிடம் இருந்து ரூ.10 லட்சம் பணமோசடி செய்து உள்ளனர்.
இதுபற்றி சஹார் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, தீபக்கின் தந்தை லோகேந்திரா சஹார், ஆக்ரா நகரில் உள்ள ஹரி பர்வதம் காவல் நிலையத்தில் அளித்த அந்த புகாரில், வியாபாரம் செய்ய போகிறோம் என கூறி அவர்கள் இரண்டு பேரும் ரூ.10 லட்சம் பணம் பெற்று கொண்டு பின்னர், அதனை திருப்பி தராமல் இழுத்தடிக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, பணத்தை திரும்ப தரும்படி அவர்களிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் எனவும் தெரிவித்து உள்ளார். மேலும், அவர்கள் துருவ் பரீக் மற்றும் கம்லேஷ் பரீக் ஆகியோர் என எப்.ஐ.ஆர். பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்களில் ஒருவர் ஐதராபாத் கிரிக்கெட் கூட்டமைப்பில் அதிகாரியாக உள்ளார் எனவும் கூறப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஜெயாவிடம் இருந்து அவர்கள் பணம் பெற்று உள்ளனர் எனவும், ஆனால் இன்னும் அதனை திருப்பி தராமல் உள்ளனர் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.