தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரத்தில் நிலா சீ புட்ஸ் என்ற மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை பதப்படுத்தும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 30 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரத்தில் செயல்பட்டு வரும் நிலா சீ புட்ஸ் என்கிற மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை பதப்படுத்தும் தனியார் ஆலையில், அருகிலிருக்கும் கடற்கரையில் இருந்து மீன்கள் கொள்முதல் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வழக்கம் போல ஆலையில் பெண் ஊழியர்கள் இரவு 11 மணியளவில் மீன் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அமோனியா சிலிண்டரில் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆலையில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தகவலறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனை அனுப்பினார்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.