தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்றது.
இந்நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை செயலகத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறும். அதே போல் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தொடக்கி மே 31 ஆம் தேதி வரை நடைபெறும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![general-examination-notice-for-10th-11th-and-12th-classes](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2022/03/118136-1.webp?resize=800%2C400&ssl=1)
இது குறித்து பேட்டி அளித்த அன்பில் மகேஷ் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர் என்றும் 10ஆம் வகுப்பு தேர்வை 9 லட்சம் பேரும் 11ஆம் வகுப்பு தேர்வை 8.49 லட்சம் பேரும் 12ஆம் வகுப்பு தேர்வை 8.36 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர் என்று தெரிவித்த அவர் மேலும் மாணவர்கள் மனநிறைவோடு தேர்வு எழுத வேண்டும் என்றும் தெரிவித்தார்.