தென்மேற்கு பருவமழை இன்று முதல் மெல்ல மெல்ல விலகாத தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம். இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாகவே தான் தொடங்கியது.
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் இன்று 25.09.23 முதல் தென்மேற்கு பருவ மழை விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 17ஆம் தேதி விலகத் தொடங்கி அக்டோபர் 15க்குள் முழுமையாக விலக வேண்டிய நிலையில், இந்த ஆண்டு 8 நாட்கள் தாமதமாக விலகத் தொடங்குகிறது என்றும் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேற்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து விலகத் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முழுமையாக விலகும்.
அதையடுத்து, வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3வது வாரத்திற்கு பிறகு தொடங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழைதான் விவசாயிகளுக்கு அதிக அளவில் கை கொடுக்கும் என்பதால் விவசாயிகளின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.