ஜிபே மூலம் புதியவகை மோசடி ஒன்றை ஒரு கும்பல் தொடங்கியுள்ளதாக காவல்துறை தரப்பில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தற்போதைய நவீன காலத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சாதாரண மக்கள் முதல் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை அவசர காலக்கட்டத்தில் உடனே பணம் பரிமாற்றம் செய்ய வசதியாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் டிஜிட்டலில் சில மோசடி கும்பல், பணத்தையும் சூறையாட தொடங்கியுள்ளது.
அந்த வகையில் ஒரு புதிய வகை மோசடி ஒன்றை தற்போது தொடங்கியுள்ளனர். ஜிபே மூலம் தெரியாத நபர் நம்முடைய வங்கி கணக்கு அல்லது ஜி.பே மூலம் குறிப்பிட்ட பணத்தை தெரியாமல் பரிமாற்றம் போல அனுப்பி, அதனை மீண்டும் தனது வங்கி கணக்கிற்கு செலுத்த சொல்லி கேட்கிறார்.
அவ்வாறு நாம் திருப்பி அனுப்பும் பட்சத்தில் உங்களுடைய வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து. எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக காவல்துறை; யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது GooglePay-க்கு அனுப்புகிறார், மேலும் உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பியதாக உங்களுக்கு தெரிவிக்க உங்களை அழைத்து,பணத்தை திருப்பி அனுப்புமாறு கோறுகிறார்.
அவ்வாறு திருப்பி அனுப்பினால் உங்களுடைய கணக்கு ஹேக் செய்யப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் பெற்றிருந்தால், அழைப்பாளரிடம் அடையாளச்சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள் எனவும், இந்த மோசடி இப்போது தான் தொடங்கி இருப்பதாகவும், கவனத்தோடு இருக்கவேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.