மேற்கு வங்காளத்தில் பேஸ்புக் காதலியை திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி அழைத்த காதலன் பாலியல் தொழிலுக்காக (prostitution) ரூ.40 ஆயிரம் பணத்திற்கு காதலியை விற்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சுந்தர்பன் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர், அதே மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவருடன் பேஸ்புக் வழியே பழகி வந்துள்ளார்.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில், சிறுமியிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்த சிறுவன், கொல்கத்தா நகருக்கு வரும்படி அவரை அழைத்து உள்ளான். மேலும், திருமணம் செய்த பின்னர், இருவரும் சேர்ந்து ஊர்சுற்ற போகலாம் என்றும் ஆசை காட்டியுள்ளான். இதனை நம்பிய அந்த சிறுமியும், யாருக்கும் தெரியாமல் அந்த சிறுவனுடன் வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியை காணவில்லை என சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட போலீசாரின் விசாரணையில், தேடப்பட்டு வந்த சிறுமியை கொல்கத்தாவில் உள்ள தர்மதல்லா நகரில் வைத்து மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுமியை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், சிறுமியை கொல்கத்தாவுக்கு அழைத்து வந்த சிறுவன் பின்னர், ஹூக்ளியில் ஆரம்பாக் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ஜைதுல் ஷேக் என்பவரிடம் ரூ.40 ஆயிரம் பணம் பெற்று கொண்டு விற்றுவிட்டதாக என கூறியுள்ளார்.
இதனையடுத்து, சிறுமி அளித்த தகவலின்பேரில், சிறுமியின் காதலர், சிறுமியை விலைக்கு வாங்கிய ஜைதுல் ஷேக் என்ற நபர் மற்றும் தானியா என்ற பாலியல் (prostitution) தொழிலாளி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சிறுமியை சோனாகாச்சி சிவப்பு விளக்கு பகுதியில் விற்க ஜைதுல் முயன்றதாகவும், அதற்குள் அந்த சிறுமியை மீட்டு விட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற சிறுவனை சிறுவர் சீர்திருத்த சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.