தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அதே போல் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் என்றும் கோவையின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, திண்டுக்கல், மதுரை, மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

மேலும் கோவையின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.