இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் ஏற்றப்பட்ட நிலச்சவு மற்றும் மழை பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
திங்களன்று, சிம்லாவில் இரண்டு நிலச்சரிவுகள் நிகழ்ந்தன. சம்மர் ஹில்லில் உள்ள சிவன் கோயிலிலும் மற்றொன்று ஃபாக்லியிலும் நிகழ்ந்தது. இந்த நிலச்சரிவுகளால் 9,600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
மேலும் இமாசலபிரதேசத்தில் கடந்த 3 நாட்களில் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது
இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இமாசலபிரதேசத்தில் இந்த பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 170 மேகவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மழை, வெள்ளம், நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
தலைநகர் சிம்லாவில் மீட்பு பணிகளுக்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. கனமழையால் மாநிலத்துக்கு இதுவரை ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறினார்.