பிரேசிலில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர்.
தென்அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் கனமழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தொடர் கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனிடையே கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.
இத்தனை அடுத்து நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணியில் பல உடல்கள் மீட்கப்பட்டன. இதுவரை வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது.
மேலும் 100-க்கும் அதிகமானோரை காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.