திருப்பூர் மாவட்டத்தில் சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் இன்று காலை 8 மணி அளவில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்த நிலையில், அங்கு பேருந்திற்காக காத்திருந்த முரளி ராஜா, மணிகண்டன், கௌதம் ஆகிய 3 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.
இடிந்து விழுந்த இந்த சமுதாய நலக்கூடம் பழுதடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்த சமுதாய நலக்கூடத்திற்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த மக்கள், மாணவ, மாணவிகள் பேருந்திற்காக காத்திருந்து நிற்பது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மலை பெய்து வந்த நிலையில், நேற்று (15.10.23) திருப்பூர் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வந்துள்ளது. இதன் காரணமாக சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை பலவீனம் அடைந்துள்ளது.
அதையடுத்து, இன்று காலை 8 மணி அளவில் ஏராளமனோர் அங்கு நின்று பேருந்திற்காக காத்திருந்து சென்றுள்ளனர். இரண்டு பேருந்துகள் அடுத்தடுத்து வந்த நிலையில், பெரும்பாலானோர் பேருந்தில் ஏறி சென்றுள்ளனர். ஒரு சிலர் மட்டுமே பேருந்திற்காக காத்திருந்துள்ளனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. இதில் பேருந்திற்காக காத்திருந்த கொழுமத்தைச் சேர்ந்த முரளி ராஜா (35), மணிகண்டன் (28), கௌதம் (29) ஆகிய மூவரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
இந்த இடிபாட்டில் சிக்கிய 3 பேருக்கும் தலை கை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவர்கள் 3 போரையும் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் 3 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். அதையடுத்து, உயிரிழந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
திருப்பூரில் சமுதாய நலக்கூட மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது குறித்து குமரலிங்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.