Kanimozhi VS Nadar Community : இந்த பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்ற கொந்தளிப்பில் உள்ள நாடார் சமூக மக்கள், ”தூத்துக்குடியில் போட்டியிட்டால் கனிமொழியையும் தோற்கடிப்போம்” எனக் கூறியுள்ளது திமுக தலைமையை அதிர வைத்துள்ளது.
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டையும் நிறைவு செய்துள்ள திமுக சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு,
நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதே போல, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியானது, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை,
திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூர் தனித்தொகுதி ஆகிய 9 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிட உள்ளது.
தவிர, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக திருச்சியிலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை முறையே நாமக்கல் மற்றும் ராமநாதபுரத்தில் போட்டியிடுகின்றன.
விசிகவிற்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இதில், கடந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட ஆரணி மற்றும் தேனி, மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்ட கோவை ஆகிய தொகுதிகளில் இம்முறை திமுகவே நேரடியாக களம் காண்கிறது.
இந்நிலையில் தான், ”வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக நாடார்கள் விளங்கும் தென் மாவட்ட தொகுதிகளில் ஒன்றில் கூட எங்கள் நாடார் சமூக வேட்பாளரை களமிறக்க திமுக விரும்பவில்லை.
எனவே, திமுக சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்களை இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வ வைப்பதே எங்கள் குறிக்கோள்” என கொந்தளிக்கின்றனர் நாடார் சமூக மக்கள்.
இதையும் படிங்க : Horror Incident : நிஜத்தில் நடந்த ‘3’ பட ஸ்டோரி.. மாணவி தற்கொலை.. பகீர் சம்பவம்!!
இது குறித்து, ”தங்கள் பெயர் மற்றும் அடையாளம் வேண்டாமே” என்ற வேண்டுகோளோடு நம்மிடம் பேசிய அவர்கள்,
”தென் மாவட்டங்களில் இருக்கும் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மக்களவை தொகுதிகளிலுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒரே சக்தியாக விளங்கி வருவது எங்கள் நாடார் இன மக்கள் தான் Kanimozhi VS Nadar Community .
கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலியை ஒட்டியுள்ள தென் மாவட்டங்களை பொறுத்தவரை திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது.
நெல்லையில் ஞானதிரவியத்தையும், தென்காசியில் தனுஷ் குமாரையும், தூத்துக்குடியில் கனிமொழியையும் வெற்றி பெறச்செய்தோம்.
அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி மற்றும் விருதுநகரில் போட்டியிட்டது. அதிலும், குமரியில் வசந்த குமார், அவரது மகன் விஜய் வசந்த் மற்றும் விருதுநகரில் மாணிக்கம் தாகூர் ஆகியோரை வெற்றியடையச் செய்தோம்.
ஆனால், இந்த முறை திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துள்ளது. நாடார்கள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ள கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கொடுத்துள்ளது. தூத்துக்குடி, தென்காசியில் மட்டும் தான் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.
தென்மாவட்டத்தில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதியையுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்துள்ளது. ராமநாதபுரத்தை முஸ்லீம் லீக்கிற்கு திமுக கொடுத்துள்ளது. சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.
ஒட்டுமொத்தமாக தென்மாவட்டங்கள் என்று பார்த்தால் தூத்துக்குடி, தென்காசி, தேனி ஆகிய 3 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் தென்காசி தவிர்த்த பிற தொகுதிகள் பொதுத் தொகுதிகள். எனவே எப்போதுமே அனைத்து பெரிய கட்சிகளும் நாடார் வேட்பாளர்களையே நிறுத்துவது வழக்கம்.
தூத்துக்குடியில் கனிமொழிதான் வேட்பாளர் என சொல்லாமல் சொல்லி விட்டது திமுக. அதேபோல் தென்காசி தனி தொகுதி என்பதால் அங்கும் நாடார் வேட்பாளர் இல்லை. கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகரில் காங்கிரஸ் போட்டி என்பதால் திமுக சார்பில் இந்த முறை தென்மாவட்டத்தில் நாடார் எம்பி இல்லை என்பது உறுதியாகி உள்ளது”
எனவே எங்களை தொடர்ந்து புறக்கணிக்க நினைக்கும் திமுகவை நாங்கள் புறக்கனிக்க முடிவு செய்ததில் தப்பேதும் இல்லையே?” எனக் கேள்வி கேட்ட அவர்கள், “ நாடார் அமைப்புகளுடன் கூடிப் பேசி தூத்துக்குடியில் கனிமொழியையும் தோற்கடிப்போம்” என அதிர வைத்தனர் அவர்கள்.
நாடார் இன சமூக மக்களின் இந்த கொந்தளிப்பு குறித்து அறிவாலயத்திற்கு நெருக்கமான வட்டாரங்களிலும் பேசினோம். அப்போது அவர்கள்,
“ கடந்த முறையைப் போல அல்லாமல் இந்த முறை திமுகவால் எளிதாக ஜெயிக்கக் கூடிய அனைத்து தொகுதிகளையுமே கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்து இருக்கிறோம். அதில், அவர்கள் அந்தந்த தொகுதிக்கு ஏற்ப வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள்.
அதே நேரம், திமுக அல்லது பாஜக ஆகிய கட்சிகளில் ஜாம்பவான்களாக உள்ள வேட்பாளர்கள் மோத வாய்ப்புள்ள தொகுதிகளில் திமுகவே நேரடியாக மோதுகிறது. அப்போதுதான் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்து 40க்கு 40 என்ற வகையில் வெற்றி பெற முடியும் என்பதால் தான் இந்த ஏற்பாடு.
தற்போது தூத்துக்குடி எம்.பி.யாக இருந்த கனிமொழி தூத்துக்குடி மக்களுக்காக மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்கள் அனைவரின் கோரிக்கைகளையுமே தீர்த்து வைத்துள்ளார் என்பது நாடார் சமூக மக்கள் உட்பட தென் மாவட்ட மக்கள் அனைவருக்குமே தெரியும்.
எனவே, இம்முறையும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருமே அமோக வெற்றி அடைவார்கள்” என நம்பிக்கை தெரிவித்தார் அவர்.
தென் மாவட்டங்களைப் போல, ஈரோடு மற்றும் வட சென்னையிலும் திமுகவில் நாடார் வேட்பாளர்களுக்கே வாய்ப்பு தர வேண்டும் என்ற குரல்களும் அச்சமூக மக்களிடம் தற்போது எழத் துவங்கி உள்ளன..!