2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சேவல் சண்டை (cockfighting) நடத்துவதற்கு அனுமதி கோரி இரண்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், சேவல் சண்டையின் (cockfighting) போது சூதாட்டம் நடத்தப்பட மாட்டாது, சேவல்கள் துன்புறுத்த மாட்டாது, என்று உறுதிமொழி அளித்தால் இந்த சேவல் சண்டைக்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இதனை அடுத்து சேவல்களை துன்புறுத்தக்கூடாது, போட்டி நடைபெறக்கூடிய இடத்தில் ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது, சேவல்களுக்கு மது கொடுக்கக்கூடாது, சேவல்களின் கால்களில் கத்தி கட்ட கூடாது போன்ற நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
மேலும், இந்த சேவல் சண்டை போட்டியின்போது குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும், இந்த நிபந்தனைகளை மீறி நடப்போர் மீது காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.