மாநில , மாவட்ட நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை செயலி வழியே பொதுமக்கள் புகைப்படத்துடன் புகாரளிக்கும் வகையில் ‘நம்ம சாலை ‘ செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சாலைகளில் பள்ளங்கள், மரம் விழுதல், நீர் தேங்கி நிற்பது போன்ற புகார்கள் ‘நம்ம சாலை ‘ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டால் 72 மணி நேரத்திற்குள் சரிசெய்யப்படும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
நெடுஞ்சாலைத்துறை நிகழ்வில் பங்கேற்று மேலூர் – திருப்பத்தூர், தஞ்சை – மன்னார்குடி, விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை இருவழிச்சாலைகளை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
“ஐபோன் பயன்படுத்துவோர் பாதுகாப்பாக பயன்படுத்தவும்” – ஐபோன் ஒட்டுக்கேட்பு புகார் குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்.
முன்பெல்லாம் விளையாட்டுத்துறை அமைச்சர்களை வெளியில் யாருக்கும் தெரியாது : ஆனால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகுதான் விளையாட்டுத்துறை உலகமே வியக்கும் வண்ணம் மாறியுள்ளது – அமைச்சர் எ.வ.வேலு உதயநிதிக்கு புகழாரம்
மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் குறித்தும் , சாலைகளில் மரம் விழுதல் , வெள்ளநீர் தேங்கி நிற்பது போன்ற புகார்களை நெடுஞ்சாலைத்துறையினருக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தும் வகையில் ‘ நம்ம சாலை ‘ எனும் செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்த ‘நம்ம சாலை ‘ செயலி, சாலைகளை பொதுமக்கள் படம்பிடித்து புகைப்படத்துடன் புகாரளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் செயலியில் பதிவேற்றும் புகார்கள், மின்னஞ்சல் மூலமாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு புகார்கள் சரி செய்யப்பவதுடன், சரிசெய்யப்பட்ட சாலையின் புகைப்படம் செயலியில் பதிவேற்றம் செய்யப்படு புகாரளித்தவரின் தொலைபேசி எண்ணுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
பள்ளங்களற்ற சாலை எனும் இலக்குடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச்செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் புகார்களில் மாநில நெடுஞ்சாலைப் பள்ளங்கள் 24 மணி நேரத்திற்குள்ளும் , மாவட்ட சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் 72 மணி நேரத்திற்குள்ளும் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தங்களுக்குள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் 45 கோட்ட பொறியாளர்களுக்கும், 192 உதவி கோட்ட பொறியாளர்களுக்கும், 274 உதவி பொறியாளர்களுக்கும் நிரந்தர அலைபேசி எண்களாக CUG எண்களை நெடுஞ்சாலைத்துறை சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் சென்னை – கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ் , ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 204 கோடியே 7 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தப்பட்ட மேலூர் – திருப்பத்தூர் இருவழிச்சாலை , 198 கோடியே 65 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தப்பட்ட தஞ்சாவூர் – மன்னார்குடி இருவழிச்சாலை , 219 கோடியே 47 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தப்பட்ட விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை இரு வழிச்சாலை ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மூன்று சாலைகளும் இருவழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டதன் மூலம் மதுரையிலிருந்து காரைக்குடிக்கும், விருத்தாசலத்திலிருந்து சென்னைக்கும், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கும் வாகனங்கள் எளிதாக செல்வதுடன் பயண நேரம் குறையும் என்றும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நகரங்களுக்கு எடுத்து செல்ல உதவும் என்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் நிறைவில், எதிர்கட்சித் தலைவர்களின் ஐபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த உதயநிதி,
ஐபோனில் ஒட்டுக்கேட்பு குறித்து தனக்கு குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை என்றும், ஐபோன் பயன்படுத்துவோர் பாதுகாப்பாக பயன்படுத்துங்கள் எனவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு ,
அமைச்சர் உதயநிதியின் கரங்கள் ரொம்ப ராசியானது …எனவே அவர் தொடங்கி வைத்த நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் பொதுமக்களிடம் பாராட்டு பெறும்.
நான் பல விளையாட்டுத்துறை அமைச்சர்களுடன் பணியாற்றியுள்ளேன், அவர்களெல்லாம் விளையாட்டுத்துறை அமைச்சர் என்றே வெளியில் தெரியாது, ஆனால் விளையாட்டு துறைக்கு விடியலாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு உலகமே வியக்கும் அளவு விளையாட்டுத்துறை மாறியிருக்கிறது என கூறினார்.