குவைத் நாட்டில் பணிபுரியும் இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த திருவாரூர்மாவட்டம், லட்சுமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாரனின் உடல் தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு விமானத்தின் வாயிலாகத் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது.
முத்துக்குமாரின் உடலுக்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடிக்கு சிறப்பு வாகனத்தில் உடலை அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மாநகரத்தந்தை அன்பழகன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்து அவரது உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்
வேலை நிமித்தமாக முத்துக்குமாரன் சென்று அங்கு உயிரிழந்து இருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.
அயலக தமிழர்களுக்கான துறை இருக்கிறது -அங்கு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் முறைப்படி பதிவு செய்துவிட்டுச் செல்ல வேண்டும் அதற்காகத்தான் இந்த துறையை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதைப் பற்றி விழிப்புணர்வு வேண்டும்.
கடந்த ஆண்டில் 152 பேரும் – இந்த ஆண்டு 116 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதே போல் வெளிநாட்டிற்குச் சென்று விட்டு மீண்டும் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று கடந்த ஆண்டு 315 பேரும் இந்த ஆண்டு 311 பேரும் கோரிக்கை முன் வைத்திருந்தனர் அவர்களை நாங்கள் அழைத்து வந்துள்ளோம்.
இந்த துறையின் மூலமாக 181 பேரைக் குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாட்டிற்கு பணிக்காக அனுப்பி வைத்துள்ளோம் – இங்கிலாந்திலிருந்து செவிலியர் பணிக்காக 500 பேர் கேட்கப்பட்டு இருக்கிறார்கள் – இதில் 481 பேர் பதிவு செய்து வேலைக்குச் செல்ல தயாராக உள்ளனர்.
பல கிராமங்களில் உள்ள நிலங்கள் வஃபு வாரியத்திற்குச் சொந்தம் என்கிற சர்ச்சை குறித்த கேள்விக்கு ?கருத்துக்கணிப்பு எண் விடுபட்டு கிராமத்தில் பெயர் மட்டும் போடப்பட்டு இருப்பதால் பல இடங்களில் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மீண்டும் மறு அளவீடு செய்வதற்கு வக்ஃப் வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் முறையாகப் பதிவு செய்துவிட்டுச் செல்வது மிக முக்கியமான ஒன்று இது குறித்த விழிப்புணர்வு நமக்குக் கட்டாயம் தேவை எனத் தெரிவித்தார்.