நாங்குநேரி கொடூரம் குறித்து பேசிய தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் “புத்தகம் தூக்க வேண்டிய கையில் ஆயுதங்கள் இருப்பது வேதனை அளிப்பதாக” தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில்..
“நாங்குநேரி சம்பவம் மிகுந்த மன வேதனை அளிப்பதாக உள்ளது. அறிவாற்றல் மிக்க மாணவர்களாக உருவாக வேண்டியவர்கள் அரிவாளோடு அலைவது மிகுந்த மன வேதனையை தருகிறது.
சாதிய வேற்றுமைகள் குறைய வேண்டும். முற்றிலும் ஒழிய வேண்டும் என்று நான் நினைத்துகொண்டிருக்கும் இந்த வேளையில், குழந்தைகள் மனதில் இந்த சாதிய வேற்றுமை, சாதிய தீ பரவிக்கொண்டிருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
கையில் புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டியவர்கள் எல்லாம் கையில் அரிவாளோடு அலைவது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதே ஊரில் சாதிய வேற்றுமை கொடுமைகளினால் 50 குடும்பங்கள் போய்விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வருவது கவலையாக உள்ளது.
அப்படியானால், சம்மந்தப்பட்ட பள்ளியில் நிர்வாகம் என்ன செய்தார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. காவல்துறையினர் இதையெல்லாம் ஏன் கண்காணிக்க மறுத்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதனால் கண்டனங்கள், ஆதரவுகள் என்பதை தாண்டி, கட்சி எல்லைகளை தாண்டி, அந்த ஊரில் என்ன நடப்பது என்பதை பார்த்துக்கொண்டு நம் ஊரில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க தவறிவிட்டோம்.
மாணவர் சின்னத்துரை படிப்பில் நன்றாக படித்தார் என்பதற்காக வெட்டப்பட்டுள்ளார். அரசாங்கம் இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். அரசு மட்டுமின்றி பொதுமக்களும் உணர வேண்டும். மத்த ஊரை பற்றியும், மற்ற மாநிலங்களை பற்றியும் நாம் கவலைப்படுகிறோம். ஆனால், இங்கே என்ன நடக்கிறது என்பதை கண்டுகொள்ளாமல் விடுகிறோம்” என பேசியுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் மாணவனை சாதி ரீதியாக சக மாணவர்களே அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரையிலும் 7 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சிலர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.